ம.பி.யில் பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்ததா ஆளும் பாஜக அரசு? வெடிக்கும் சர்ச்சை
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா மரணங்கள் 6,148 ஆக பதிவாகி இருந்தது. கொரோனா காலங்களில் மிக மிக அதிகமான மரணங்கள் முதல் முறையாக பதிவானது.

விட்டுபோன கொரோனா மரணங்கள்
பின்னர்தான் பீகார் மாநிலத்தில் விடுபட்ட கொரோனா மரணங்கள் மொத்தமாக சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகமானது தெரியவந்துள்ளது. தற்போது பீகாரை தொடர்ந்து மத்திய பிரதேசமும் கொரோனா மரணங்கள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ம.பி.யில் மரணங்கள் எண்ணிக்கை
மத்திய பிரதேசத்தில் 2018, 2019-ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்புக்கு முன்னர் ஏப்ரல்- மே மாதங்களில் சராசரியாக 59,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார்.

மறைக்கப்படும் மரணங்கள்
ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய 2020, 2021-ம் ஆண்டுகளில் ஏப்ரல்- மே மாதங்களில் 2.3 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவுக்கு முந்தைய காலங்களை ஒப்பிடுகையில் சுமார் 290% என்ற அளவில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசு புள்ளி விவரம்
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசோ, இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் வெறும் 4,100 பேர்தான் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கணக்கு காட்டுகிறது. இதனால்தான் கொரோனா மரணங்களை மத்திய பிரதேச பாஜக அரசு மறைக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

போபால் மாவட்ட கணக்கு மட்டும்...
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போபால் மாவட்டத்தில் மட்டும் மயானங்கள், கல்லறைகளில் மொத்தம் 3811 மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் அரசு தரப்பில் கொரோனாவால் 104 பேர் மட்டுமே போபால் மாவட்டத்தில் இறந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சை தொடர்பாக் மத்திய பிரதேச பாஜக அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications