மே.வங்கத்தில் 180 வங்கதேச தீவிரவாதிகள்- மமதாவிடம் பட்டியலை கொடுத்தார் பாதுகாப்பு ஆலோசகர் தோவல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பதுங்கியிருக்கும் 180 வங்கதேச தீவிரவாதிகள் பட்டியலை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் பர்த்வானில் கடந்த 2-ந் தேதி வீடு ஒன்றில் வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வங்கதேச எல்லையோர மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பல நூறு வங்கதேச தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் ஊடுருவி முகாம் அமைத்து இந்தியாவில் நாசகார செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது.
ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் என்ற தீவிரவாத அமைப்பு மேற்கு வங்கத்தை தளமாக அமைத்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பர்த்வான் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது வங்கதேச எல்லையோர மாவட்டமான ஜல்பைகுரி, தீவிரவாதிகளின் முகாமாக எப்படி மாறியுள்ளது என்று விவரித்தார். அதனடிப்படையில்தான் அண்டை மாவட்டங்களும் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என்றும் மமதாவிடம் அஜித் தோவல் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருக்கும் 180 வங்கதேச தீவிரவாதிகளின் பட்டியலையும் மமதாவிடம் அஜித் தோவல் ஒப்படைத்தார். தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக மமதா பானர்ஜியும் உறுதியளித்துள்ளார்.