காஷ்மீர் தேர்தல் ருசிகரம்- பிரசாரத்துக்கு நான் வரலை.. விருப்பமில்லாதவங்க போட்டியிடாதீங்க- குலாம் நபி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுவிட்டதால் பிரசாரம் செய்ய வர இயலாது; தாம் பிரசாரம் செய்ய வராததால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என நினைக்கிற வேட்பாளர்கள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவரான குலாம் நபி ஆசாத் விசித்திரமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் மாஜி முதல்வர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு 2019-ல் ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீரின் அத்தனை முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் குலாம் நபி ஆசாத் மட்டும் தப்பித்திருந்தார்.

பாஜகவுடன் நெருக்கம்: இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் நெருக்கமான உறவை வலுப்படுத்திக் கொண்டார் குலாம் நபி ஆசாத். இதனால் அவருக்கு மீண்டும் ராஜ்யசபா பதவியை காங்கிரஸ் கட்சி தரவில்லை. ராஜ்யசபாவில் குலாம் நபி ஆசாத்துக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் மோடி உருக்கமாக பேசியதும் பெரும் பேசுபொருளானது. பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத் நிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது.
தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்: இதனையடுத்து காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கலகங்களை எழுப்பவும் குலாம் நபி ஆசாத் முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி பலன் தரவில்லை. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் அரசியலை மையமாக வைத்து ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற தனிக் கட்சியை தொடங்கினார்.
குழப்பத்தில் குலாம் நபி கட்சி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் குலாம் நபி ஆசாத், காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசாத் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸுக்கு திரும்பிவிட்டனர். ஒரு கட்டத்தில் ஆசாத் கட்சியே காங்கிரஸுடன் இணையப் போவதாகவும் தகவல்கள் பரவின, இதனை அந்த கட்சி திட்டவட்டமாக மறுத்தது தற்போதைய ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஆசாத் கட்சி குறித்த பேச்சுகளே இல்லாத நிலைமைதான் உள்ளது.
தேர்தலில் குலாம் நபி கட்சி போட்டி: மேலும் பாஜகவுடன் ஆசாத் கட்சி கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனாலும் ஆசாத் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் 11 இடங்களில் ஆசாத் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
பிரசாரம் செய்ய வரலை.. : இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காரணத்தால் என்னால் தேர்தல் பிரசாரத்துக்கு வர இயலாது. நான் தேர்தல் பிரசாரம் செய்ய வர இயலாமல் போனதற்காக வருந்துகிறேன். நான் தேர்தல் பிரசாரம் செய்யாததால் தங்களது வெற்றி பாதிக்கும் என நினைக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.












Click it and Unblock the Notifications