ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பாஜக நிரப்பும்... அமித்ஷா பரபரப்பு பேட்டி
ஹைதராபாத்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் அதை பாஜக நிரப்பும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில்,
" ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப பாஜக தன்னை வலுப்படுத்திக் கொள்ளும்.
மோடி அரசு வளர்ச்சித் திட்டங்களைத்தான் முன்னெடுத்து செல்கிறது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதம் இல்லாமல் நாடு முழுவதும் 4½ கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டித்தரப்பட்டுள்ளதே அதற்கு உதாரணம். 1,000 கிராமங்களில் அரசு மின் உற்பத்திக்கான பணிகளை செய்துள்ளது. நிலைமை இப்படி இருக்க பாஜக அரசை சிறுபான்மையினரின் விரோதிகளாக சித்தரிப்பது தவறு.
என்னைப் பொறுத்தவரை நல்லவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவரது வருகையை மனதார வரவேற்கிறேன். ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதை முழுமனதுடன் வரவேற்போம்." என்று கூறியுள்ளார் அமித்ஷா.