அனல் பறக்கும் ஜார்க்கண்ட் தும்ரி இடைத் தேர்தல்- 'நண்பேன்டா' வாக பிரசாரம் செய்யும் "இந்தியா" அணி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரும் மாநில அமைச்சருமான பேபி தேவிக்கு ஆதரவாக "இந்தியா" கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி; மேற்கு வங்கம் துப்குரி: உ.பி. கோசி: உத்தரகாண்ட் பாகேஷ்வர்; கேரளா புதுப்பள்ளி; திரிபுராவின் போக்சா நகர், தன்பூர் ஆகிய 7 தொகுதிகளில் செப்டம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி வேட்பாளராக மாநில அமைச்சர் பேபி தேவி களமிறக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான ஜகர்நாத் மகாதோவின் மனைவி பேபி தேவி. 2005-ம் ஆண்டு முதல் கிரிடித் மாவட்டத்தில் தொடர்ந்து வென்று வந்தவர் ஜகர்நாத் மகாதோ. இவருக்கு ஆதரவாக "இந்தியா" கூட்டணியின் காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர் பேபி தேவிக்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஏஜேஎஸ்யூ கட்சியின் யசோதா தேவி களமிறக்கபப்ட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு ஜகர்நாத் மக்தோ 71,128 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏஜேஎஸ்யூ கட்சியின் யசோதா தேவி 36,480 வாக்குகள் பெற்றார். அதேநேரத்தில் பாஜக களமிறக்கிய பிரதீப் ஷாகு 36,013 வாக்குகள் பெற்றார். இம்முறை ஏஜேஎஸ்யூ கட்சியும் பாஜகவும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக மோதுகிறது. இதனால் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications