டெல்லியை தொடர்ந்து பீகார். ஒடிஷாவில் அடுத்தடுத்த நிலநடுக்கம்- பொதுமக்கள் பெரும் அச்சம்!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டா. பீகாரில் ரிக்டரில் 4.0 ஆகவும் ஒடிஷாவில் ரிக்டரில் 4.7 ஆகவும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகி இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் உருவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
டெல்லி நிலநடுக்கம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தமது எக்ஸ் பக்கத்தில், அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த நிலநடுக்க அதிர்வுகளானது டெல்லியை சுற்றிய புறநகர் பகுதிகளான நொய்டா, குர்கானிலும் உணரப்பட்டது. மேலும் டெல்லி போலீசார் தரப்பில் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் அழைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி நிலநடுக்கம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அமைதி காக்க வேண்டும். அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம்
டெல்லியைத் தொடர்ந்டு பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பீகாரின் சிவான் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது.
இதேபோல ஒடிஷாவிலும் இன்று காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. டெல்லியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications