ரூ. 1000 கோடி அபராதம்? ஃப்ளிப்கார்டுக்கு அமலாக்கப்பிரிவு அதிரடி நோட்டீஸ்!
டெல்லி: அன்னிய செலாவணி விதிகளை மீறியதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்டுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவனம் கடந்த 6-ந் தேதி மாபெரும் தள்ளுபடி விற்பனையை பிக் பில்லியன் டே என்ற பெயரில் நடத்தியது. இதன் மூலம் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏராளமானோர் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தை முற்றுகையிட்டனர். இப்படி ஒரே நேரத்தில் அதிகமானோர் முற்றுகையிட்டதால் ப்ளிப்கார்ட் இணையதளம் திணறியது. பின்னர் மறுநாள் இதற்காக அந்நிறுவனம் மன்னிப்பெல்லாம் கேட்டது.
இருப்பினும் அன்றைய நாளில் பலநூறு கோடி ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு வருமானம் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விதிகளை மீறி இத்தகைய தள்ளுபடி விற்பனையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது பிக் பில்லியன் டே விற்பனையின் போது அன்னிய செலாவணி விதிகளை மீறியிருப்பதாக கூறி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்னிய செலாவணி விதி மீறலுக்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு சுமார் ரூ1,000 கோடி அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.