அள்ள அள்ள பணம்.. ‘மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை!
கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையில் தொண்டத் தோண்ட கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை அர்பிதா முகர்ஜி அளித்த தகவலின்பேரில், கொல்கத்தாவில் சினார் பார்க் பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
அந்த வீட்டிற்கான சாவி இல்லாததால், அதிகாரிகள் கதவை உடைத்தனர். அந்த வீட்டிலும் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்க ஊழல்
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2011-2016 ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் தேர்வு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டில் இறங்கியது. இந்த ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இந்த காலகட்டத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டார்ஜிக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.50 கோடி பறிமுதல்
பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அர்பிதா முகர்ஜியின் ஒரு வீட்டில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்கம், வெள்ளி நகைகளும் சிக்கின. இந்த ரெய்டில் சுமார் ரூ.50 கோடி அளவில் கணக்கில் வராத ரொக்கமும், ரூ.2 கோடி அளவிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊழல் பணம்
இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணக்கட்டுகளை எண்ணுவதற்கு பல மெஷின்கள் வரவழைக்கப்பட்டன. இந்த பணம் மற்றும் நகைகள், பள்ளி சேவை ஆணையம், ஆசிரியர் தேர்வு வாரிய ஆட்சேர்ப்பு விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகமடைந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் கடந்த 23ஆம் தேதியே கைது செய்யப்பட்டனர்.

வீட்டிலேயே வங்கி
அமலாக்கத்துறை விசாரணையில் அர்பிதா முகர்ஜி, என்னுடைய வீட்டில் ஒரு அறையை பார்த்தா பணம் சேமித்து வைக்க பயன்படுத்தினார். ஆனால் இந்த அறையில் அவரும், அவருக்கு நெருக்கமான சிலரும் மட்டுமே உள்ளே நுழைய முடியும். எனது வீட்டின் இந்த அறை ஒரு மினி பேங்க் போல பயன்படுத்தப்பட்டது. இந்த அறைக்கு வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை பார்த்தா வந்து செல்வார் என்று அர்பிதா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு வீட்டில்
இந்நிலையில், அர்பிதா முகர்ஜி அளித்த தகவலின்பேரில், கொல்கத்தாவில் சினார் பார்க் பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சாவி இல்லாததால், மத்திய படை அதிகாரிகள் முன்னிலையில் கதவை உடைத்தனர். அந்த வீட்டிலும் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், அங்கு என்ன மாதிரியான செயல்பாடுகள் நடந்தன என்று பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications