பால் வாங்க சென்ற பெண்ணை நடுரோட்டில் வெட்டி கொன்று நகை கொள்ளை! பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: பால் வாங்க சென்ற பெண்மணியை நடு ரோட்டில் வெட்டி கொன்று வளையல், செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நந்தினி லேஅவுட் காவல் சரகத்துக்கு உட்பட்ட சங்கர நகரை சேர்ந்தவர் திம்மய்யா. கர்நாடக மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி முத்துலட்சுமி (56). இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டதால் கணவன், மனைவி மட்டுமே வீட்டில் வசித்தனர்.
தினமும் காலை 6 மணியளவில் பால் வாங்க கடைக்கு செல்வது முத்துலட்சுமியின் வழக்கம். இன்று காலையும் பால் வாங்க முத்துலட்சுமி கடைக்கு சென்றார். வீட்டில் இருந்து சற்று தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள், அரிவாளால் முத்து லட்சுமியை சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த செயின், கைகளில் அணிந்திருந்த வளையல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அக்கும்பல் தப்பியோடிவிட்டது. தகவலறிந்து போலீசார் வருவதற்குள் முத்துலட்சுமி அதே இடத்தில் பலியானார்.
காலையில் நடுரோட்டில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நகர இணை போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. நகைக்காக இக்கொலை நடந்திருக்க வாய்ப்பு குறைவு என போலீசார் தெரிவிக்கின்றனர். சொத்து தகராறு, முன்விரோதம் போன்றவற்றால் நடத்தப்பட்ட கொலையை திசை திருப்ப நகைகளை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.