சிகப்பழகே வரல: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15 லட்சம் வழங்க இமாமி நிறுவனத்திற்கு உத்தரவு
டெல்லி: இமாமி சிகப்பழகு கிரீம் பயன்படுத்தியும் சிகப்பழகு பெறாததால் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15 லட்சம் வழங்க டெல்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பராஸ் ஜெயின் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் மனு ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
என் சகோதரர் நிகில் ஜெயின் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி ஷாருக்கானின் பரிந்துரையின்பேரில் இமாமியின் ஃபேர் அன்ட் ஹேண்ட்சம் கிரீமை வாங்கினார். அந்த கிரீமின் பிராண்ட் அம்பாசிடரான ஷாருக்கான் இமாமி கிரீமை பயன்படுத்திய 3 வாரத்தில் சிகப்பாக ஆகலாம் என்று விளம்பரத்தில் வாக்களித்தார்.
என் சகோதரர் அந்த கிரீமை தொடர்ந்து 3 வாரங்கள் பயன்படுத்தியும் முகம் சிவப்பாக ஆகவில்லை. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அந்நிறுவனம் என் சகோதரரின் உணர்வுடன் விளைாடியுள்ளது. அந்த கிரீமின் பாக்கெட்டில் தெரிவித்திருந்தது போன்று அவர் அதை பயன்படுத்தியும் பலன் இல்லை.
எனவே பிற ஆண்களை பாதுகாக்கும் எண்ணத்தில் இந்த வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம் பராஸ் ஜெயினுக்கு ரூ. 15 லட்சம் வழங்க இமாமி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.