ஜார்க்கண்ட்: மாஜி அமைச்சர் முறைகேடாக குவித்த ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் அமைச்சரின் ரூ.100 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006-08 ஆம் ஆண்டுகளில் மதுகோடா தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. அவரது அமைச்சரவையில் அனோஸ் இக்கா என்பவர் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் பதவி ஏற்ற சில மாதங்களுக்குள் அனோஸ் இக்கா ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கி குவித்து விட்டதாக பரபரப்பு குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.
அந்த குற்றச்சாட்டுக்களை அனோஸ் இக்கா மறுத்தாலும், அவர் பண மோசடிகள் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கத் துறையும் அனோஸ் இக்காவின் சொத்துக்கள், பண பரிமாற்றங்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். சி.பி.ஐ. விசாரணையில் அனோஸ் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக தெரிய வந்தது.
டெல்லியில் மட்டும் அவருக்கு 4 சொகுசு பங்களாக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அரியானா மாநிலத்தில் அவர் பண்ணை வீடு ஒன்று வங்கி இருப்பதும் தெரிய வந்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அனோஸ் இக்காவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.