தமிழ்நாட்டை தொடர்ந்து மே.வங்கத்தில்..அமலாக்கத்துறையினர் மீது திமு திமுவென 100 பேர் சரமாரி தாக்குதல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு சென்ற துணை ராணுவப் படையினரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் படுகாயமடைந்தனர். படுகாயத்துடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில்: தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது பெரும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ20 லட்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டார். இந்த வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கித் திவாரியின் கூட்டாளிகளாக இருந்த மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த பரபரப்புகளுக்கு இடையே மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications