சிசிடிவி கேமராவில் பதிவான ஆந்திராவில் அட்டூழியம் செய்யும் ஊசி மனிதனின் உருவம்
ஹைதராபாத்: ஆந்திராவில் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வரும் மர்ம நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர் தனது முகத்தை ஹெல்மெட் அல்லது கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பெண்களுக்கு திடீர் என ஊசி போட்டுவிட்டு தப்பியோடிவிடுகிறார்.

அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் செலுத்தியது சாதாரண ஊசி தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
அவர் என்டகான்டி பாலத்தில் முதன்முறையாக பள்ளி சிறுமிக்கு ஊசி போட்டார். அதன் பிறகு கடந்த மாதம் 22ம் தேதி அவர் யன்டகான்டி கிராமத்தில் மீண்டும் ஒரு பள்ளி சிறுமிக்கு ஊசி போட்டார். பின்னர் ஆகஸ்ட் 25ம் தேதி அவர் அதே பகுதியில் ஒரே நாளில் மூன்று பேருக்கு ஊசி போட்டார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவரின் அங்க அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உண்டி மண்டல் பகுதியில் உள்ள சுமார் 50 சிசிடிவி கேமராக்களில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவானவற்றை போலீசார் சோதனை செய்தனர். அதில் சம்பவங்கள் நடந்த அன்று அந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களில் ஒருவரின் உருவம் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதுடன் ஒத்துப்போகிறது.
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து போலீசார் ஊசி நபரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications