வெறும் 2 மணி நேரம் உண்ணாவிரம் இருந்த ஆம்ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் வினோத் குமார் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி, அரவிந்த் கெஜ்ரிவால் அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தவறிவிட்டதாகவும், அதனை கண்டித்தே தாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதாகவும் கூறினார். இந்த நிலையில் திடீரென அவர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
கெஜ்ரிவால் சர்வாதிகாரி
பத்து நாட்களுக்கு முன்னர், டெல்லி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்டதாகவும், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல் நடந்துகொள்வதாகவும் வினோத்குமார் பின்னி குற்றம்சாட்டியிருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்த பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பின்னியை நீக்குவதாக நேற்றிரவு அறிவித்தது.
துணை நிலை ஆளுநரிடம் புகார்
இந்நிலையில், டெல்லி மாநில துணை நிலை ஆளுநரை, அதிருப்தி எம்எல்ஏ வினோத்குமார் பின்னி இன்று சந்தித்து பேசினார். அப்போது, சட்ட அமைச்சர் அமைச்சர் சோம்நாத் பார்தி விவகாரம் குறித்து புகார் கூறினார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சிக்குள் தன்னைப் போல அதிருப்தியுடன் இருப்பவர்களை அடக்கி வைக்கவே தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சோம்நாத் பாரதி விவகாரம்
அரவிந்த் கேஜ்ரிவால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். துணை நிலை ஆளுநரிடம் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரியதாகவும், அதற்கு துணை நிலை ஆளுநர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
கடிதம் வரவில்லை
கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து முறையாக தமக்கு கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாகவே தான் அதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
நடவடிக்கை இல்லை
ஊழலை ஒழிப்பதே லட்சியம் என்று கூறும் ஆம் ஆத்மி கட்சி இதுவரை டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு கமாண்டோப் படைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
கேஜ்ரிவால் மறுப்பு:
ஆம் ஆத்மி கட்சிக்குள் தன்னைப் போல் நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பதாக பின்னி கூறியுள்ளதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றும் எப்போதும் நினைத்ததில்லை, எங்கள் இலக்கு மக்களுக்கு தொண்டாற்றுவது மட்டுமே என்றார்.