பெண்களைப் பற்றிய கமெண்ட்டால் சர்ச்சை! மன்னிப்பு கோரினார் பரூக் அப்துல்லா!!
டெல்லி: பெண் உதவியாளரை வைத்துக் கொள்வதே அச்சமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்த கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. இதனால் வேறுவழியில்லாமல் தாம் தெரிவித்த கருத்துக்கு பரூக் அப்துல்லா மன்னிப்பு கோரியுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீதான பாலியல் தொல்லை புகார் குறித்து மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர், பாலியல் பலாத்காரங்கள் தற்போது அதிகரித்து கொண்டே செல்கின்றன. மிக மோசமான நிலைதான் இருக்கிறது. நான் பெண்களை இதற்காகக் குறை சொல்லவில்லை. சமூகம் அப்படி மாறியிருக்கிறது.

பெண் உதவியாளரை நியமிக்கலாமா என்பது குறித்து பல முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டியதிருக்கிறது. நான் பெண் செயலர்களை வைத்து கொள்ள மாட்டேன். ஏன் பெண்களிடம் பேசக் கூட அச்சமாக உள்ளது. எங்கே அவர்கள் புகார் தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதியும் உருவாகியுள்ளது என்றார்.
கடும் கண்டனம்
இந்த கமெண்ட்தான் கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனியோ, பரூக் அப்துல்லாவிடம் இருந்து இதுபோன்ற கருத்துகளை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.
இதேபோல் பாரதிய ஜனதாவின் ஸ்ருதிராணியும், ஒரு மூத்த அரசியல் தலைவர் இப்படி மிகவும் கேவலமாகவா பேசுவது என்று கொந்தளித்திருக்கிறார்.
மகனும் கோபம்
இவர்கள் மட்டுமின்றி பரூக் அப்துல்லாவின் மகனும் காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா ட்விட்டரில், தமது தந்தை பேசியது தவறு, அதற்காக அவர் மன்னிப்பு கோருவார் என தான் நம்புகிறேன் என்று தட்டிவிட்டிருக்கிறார்.
இதனையடுத்து பரூக் அப்துல்லா இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். தமது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அந்தக் கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications