முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால் பாணியில் ED சம்மனை புறக்கணித்த பரூக் அப்துல்லா.. மேட்டர் இதுதான்!
ஜம்மு: கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்து விட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது. அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா. கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ..43.69 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால் பரூக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் இந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், பரூக் அப்துல்லா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. நான் ஆஜராக மாட்டேன் என்று மட்டும் கூறிய பரூக் அப்துல்லா, வேறு எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை.
இன்று ஆஜராக மறுத்த நிலையில், பரூக் அப்துல்லாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்படுமா? அல்லது அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை புறக்கணித்து இருந்த நிலையில் தற்போது, பரூக் அப்துல்லாவும் புறக்கணித்து உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினரை குறிவைத்து அமலாக்கத்துறை ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications