இந்துக்களுக்கு ஆபத்தா?.. அப்படித்தான் சொல்லுவாங்க.. ராமர் எல்லாருக்கும் பொதுவானவர்: ஃபரூக் அப்துல்லா
ராமர் அனைவருக்கும் பொதுவானர் என்று பரூக் அப்துல்லா பேசியுள்ளார்
ஸ்ரீநகர்: கடவுள் ராமர் இந்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்குமே உரியவர் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை, கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையடுத்து, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சி அமையவில்லை.
எனவே, எப்படியும், வரும் வருடம் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்கிறார்கள்.. ஆனால், அதற்குள் அங்குள்ள கட்சி தலைவர்கள், அரசியல் நெடி கலந்த பேச்சை இப்போதே பேச துவங்கிவிட்டார்கள்..
இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, கட்சியில் இருந்து 2 நாளைக்கு முன்பு திடீரென விலகிவிட்டார். இதை பற்றி கேட்டதற்கு, இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறேன்.. கட்சித் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும்" என்று காரணம் கூறியிருந்தார்.. இதற்கு பிறகு,
அக்னூர் மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக சொல்வார்கள், அதனால் யாரும் அதற்கு இரையாகவேண்டாம் என்று மக்களுக்கு அட்வைஸ் தந்து எச்சரித்துள்ளார்.. அந்த கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியபோது: இங்கே எந்த ஒரு மதமும் கெட்டது கிடையாது.. அதன் மனிதர்கள்தான் கெட்டவர்கள்.. மதம் கிடையாது.. தேர்தல் நேரத்தில், இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக சொல்வார்கள்.. ஆனால் அதற்கு இரையாகிவிடவேண்டாம்..
இந்தியாவில் 70 முதல் 80 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாருமே ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.. ராமர் இந்துக்களுக்குரியவர் மட்டும் கிடையாது, அவர் அனைவருக்குமானவர்.. நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் உடன் கைகோர்த்ததில்லை.. ஜின்னா அவ்வளவு சொல்லியும்கூட, என்னுடைய தந்தை பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவில்லை.. ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. வேலையில்லா திண்டாட்டம் காஷ்மீரில் அதிகரித்துவிட்டது" என்றார்.