சிக்கிம் எல்லையில் சீனாவின் குடைச்சல்- அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை!
சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நாளை அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
டெல்லி: சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நாளை அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சிக்கிம் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது சீனா. இதனை தடுத்த இந்திய வீரர்களுடன் கைகலப்பில் சீன வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த ஒரு மாதமாகவே இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் படை வீரர்களை குவித்து பலத்தை காண்பித்து வருகின்றன.
மிரட்டும் சீனப் பத்திரிக்கை
சீன அரசுப் பத்திரிக்கையும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கும் என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சீனர்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம்
இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
நாளை முக்கிய முடிவு
இந்தக் கூட்டத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சீனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
சீன குடைச்சலுக்கு முற்றுப்புள்ளி
சீன விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பின்பு சீனா கொடுத்துவரும் குடைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு வலுவான ஒரு முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.