சர்ச்சை பேச்சால் மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி.. ஒடிசா போலீசாரும் வழக்குப் பதிவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி, கடந்த மாதம் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது ஒடிசா போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அசாம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான 'இந்திரா பவன்' கட்டடத்தை அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி கடந்த ஜனவரி 15 ஆம் தேதி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய பலன் நமது அரசியலமைப்பு. பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ், என்ற அரசியல் சார்ந்த அமைப்புகளை எதிர்த்து போராடுகிறோம் என நீங்கள் நினைத்தால், நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரியாத நபர்கள் என்று அர்த்தம். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளையும் கைப்பற்றி விட்டன. நாம், பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடுகிறோம்." எனப் பேசியிருந்தார்.

இந்திய அரசையும் எதிர்த்து போராட்டம் என்ற ராகுலின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, "இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என தெளிவாகச் சொன்ன ராகுலை பாராட்டுகிறேன். ராகுலும் அவரை சுற்றி உள்ளவர்களும் இந்தியாவை இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் விரும்பும் அர்பன் நக்சல்களுடன் தொடர்பில் உள்ளனர் என்பது ரகசியம் அல்ல. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், நாட்டை பிரிக்கவும், சமூகத்தை பிளவுபடுத்தும் திசையிலேயே உள்ளன." எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சை கண்டித்து ராமா ஹரி புஜாரி என்பவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தார். 'ராகுல் காந்தியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் வரம்புகளை மீறியுள்ளது. இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் கூறியிருப்பது, மக்களை தூண்டிவிடும் வகையில் உள்ளது. ராகுலின் பேச்சு நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் சீரழிக்கும் வகையில் இருக்கிறது. வேண்டுமென்றே ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் காயப்படுத்தும் வகையில் தேச விரோத கருத்துகளை தெரிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒடிசா போலீசார், பாரதிய நியாயா சன்ஹிதாவின் 152 மற்றும் 197 (1) (டி) பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி மீது ஏற்கனவே இதுதொடர்பான புகாரில் அசாம் மாநிலம் கவுஹாத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒரு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி பதவியைத் திரும்பப் பெற்றிருந்தார் ராகுல் காந்தி. மோடி பெயர் பற்றி ராகுல் விமர்சித்ததற்கு எதிரான வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, மீண்டும் 4 மாதங்களுக்குப் பிறகு எம்.பியானார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications