ஹைதராபாத் கடத்தல் முயற்சி: மீட்கப்பட்டது நக்சல் எதிர்ப்பு படையின் ஏ.கே.47 துப்பாக்கி- திடுக் தகவல்!
ஹைதராபாத்: அரபிந்தோ பார்மா இயக்குனரும், துணை தலைவருமான கே. நித்யானந்த ரெட்டியை ஹைதராபத்தில் கடத்துவதற்கு மர்ம நபர் பயன்படுத்தியது நக்சல் எதிர்ப்புப் படைக்குச் சொந்தமான ஏ.கே. 47 ரக துப்பாக்கி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இன்று காலை 7.00 மணியளவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிய நித்யானந்த ரெட்டி காரில் அமர முயன்றார், அப்போது ரெட்டியின் 'ஆடி' காரின் பின்புற இருக்கையில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கி முனையில் ரெட்டியை கடத்த முயற்சித்திருக்கிறார்.
உடனே சுதாரித்துக் கொண்ட ரெட்டி அந்த நபரை வளைத்துப் பிடித்துக் கொள்ள மர்ம நபரோ 8 முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் பெரும்பாலானவை காரின் கண்ணாடிகளை துளைத்துக் கொண்டு வெளியே சிதறியிருக்கின்றன. இதில் ரெட்டி காயமின்றி தப்பினார்.
பின்னர் ரெட்டி கூச்சலிட அவரது சகோதரர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியை காரில் போட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கிறான். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காரில் இருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியை கைப்பற்றினர்.
மேலும் சம்பவ இடத்தில் சில காலிகுண்டுகளையும் கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கியானது ஓராண்டுக்கு முன்பு நக்சல் எதிர்ப்பு படையினரிடம் இருந்து காணாமல் போனது என்கிறார் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி. அதேபோல் நித்யானந்த ரெட்டி தமக்கு தொழில் போட்டியாளர்களோ எதிரிகளோ இல்லை என்று திட்டவட்டமாக கூறுவதால் பணத்துக்காக அவரைக் கடத்த நடந்த முயற்சியாகவும் தெரிகிறது என்கின்றனர் போலீசார்.
இதனிடையே தம்மை கடத்த முயற்சித்த நபர் 5.3 அடி உயரமுள்ள நபர் என்றும் தம்மை கடவுள்தான் காப்பாற்றினார் என்றும் கூறுகிறார் நித்யானந்தா. இந்த சம்பவம் நடந்த இடம் கேபிஆர் பூங்கா. இந்த பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலரும் வசித்து வருகின்றனர். குறிப்பாக கேபி ஆர் பூங்காவாவின் பிரதான வாயிலே தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தை நோக்கியதாகத்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.