மணிப்பூர் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: துப்பாக்கி சூடு- கல்வீச்சு சம்பவங்களால் பதற்றம்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் தேர்தலுக்கு முன்னதாக மொத்தம் 42 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் என்.பி.பி. வேட்பாளரின் தந்தை மற்றும் ஜேடியூ வேட்பாளர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பல வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத்சந்த்பூர் மாவட்டத்தில் பாஜக- காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஒன்று சேதமடைந்தது. இதனையடுத்து புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டது.
கெய்ராவ் வாக்குச் சாவடியில் இரு கட்சியினரிடையேயான மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை என்கின்றன தகவல்கள். சில இடங்களில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications