8 நாளாக தவிக்கிறோம், ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள்.. ரத்னகிரியில் அதிகாரியிடம் கொந்தளித்த மீனவர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் கரைஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்க 8 நாட்கள் கழித்து வந்த தமிழக அரசு அதிகாரியிடம் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரத்னகிரி : மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் கரைஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்க 8 நாட்கள் கழித்து வந்த தமிழக அரசு அதிகாரியிடம் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலையிலேயே ரத்னகிரி வந்த அதிகாரி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் மீனவர்களை சந்திக்க வந்ததும் அவர்களுடைய கொந்தளிப்பிற்கு காரணம்.
கடந்த 30ம் தேதி கன்னியாகுமரியை புரட்டிப்போட்ட ஓகி புயலால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் குஜராத், மஹாராஷ்டிரை உள்ளிட்ட கடற்கரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். படகுகள் சேதமடைந்த நிலையில் புயல் நிலைமை சரியான போதும் ஊர் திரும்ப உதவி கிடைக்காமல் மீனவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி கடல்பகுதியில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு அதிகாரி இன்று நேரில் சென்றார். அப்போது, அதிகாரியுடன் மீனவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாட்களாக தங்களை மீட்க வராதது ஏன் என்று மீனவர்கள் கொந்தளித்தனர்.
எத்தனை தமிழக மீனவர்கள் அங்கிருக்கிறார்கள் என்ற விவரம் கூட இல்லாமல் அதிகாரி அங்கு சென்றவுடன் தமிழக மீனவர்கள் உங்களது ஆவணங்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறி இருக்கிறார் அவர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், எத்தனை மீனவர்கள் இருக்கிறோம் சாப்பாட்டிற்கு என்ன செய்கிறோம் என்ற எந்த அக்கறையும் இல்லாமல் சவகாசமாக இன்று வந்தது ஏன் என்று மீனவர்கள் கேட்டனர்.
எங்களது உறவினர்கள் ரயில் மறியல் செய்த பின்னர் தான் அரசுக்கு அக்கறை வந்ததா, எங்களது ஓட்டுகள் மட்டும் வேண்டும் நாங்கள் என்ன கஷ்டப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு அரசு தயாராக இல்லையா என்று மீனவர்கள் கேள்வியால் அதிகாரியை துளைத்துவிட்டனர். காலையில் ரத்தினகிரி வந்வர் ஓய்வு எடுத்துவிட்டு மாலையில் வருவது ஏன் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரி மக்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறாரே என்றும் மீனவர்கள் ஆத்திரப்பட்டனர்.
இதனையடுத்து எவ்வளவு உதவித் தொகை அரசு அளிக்கிறது என்று கேட்டதற்கு ஆளுக்கு ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையும், ஆயிரம் லிட்டர் டீசலும் தர அரசு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்தார். தாங்கள் ஒவ்வொருவரும் 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மீன் பிடிக்க வந்த நிலையில் 2 ஆயிரம் உதவித்தொகை என்பது எப்படி போதுமானதாக இருக்கும் என்றும் மீனவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.