இரும்பு கம்பிகள் + 20 அடி சிறை சுவர்.. வெறும் போர்வை தான்.. மின்னலாக தப்பி அதிர வைத்த கைதிகள்
குவஹாத்தி: போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதிகள் ஐந்து பேர், அஸ்ஸாமில் உள்ள சிறையில் இருந்த கம்பியை உடைத்து, பெட்ஷீட்கள், போர்வைகள் மற்றும் லுங்கிகளை மட்டுமே பயன்படுத்தி 20 அடி சுவரை லாவகமாக தாண்டி தப்பியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை இந்த சம்பவத்தை சிறை கைதிகள் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அத்துடன் சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். சிறையை சுற்றியுள்ள தடுப்பு சுவர்கள் மிகமிக உயரமாக இருக்கும். அத்துடன் மின்வேலியும் போடப்பட்டிருக்கும். இவ்வளவு பாதுகாப்பு ஒரு புறம் எனில், சிறையில் போலீசார் அடிக்கடி ரோந்தும் வருவார்கள். அத்துடன், சிறையில் கம்பிகளுக்குள்தான் அடைக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழலும் சில கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிப்பது உண்டு. அப்படித்தான் நேற்று அதிகாலை சிறை கைதிகள் ஐந்து பேர் தப்பி இருக்கிறார்கள்.

சைபுதீன், சைருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய 5 கைதிகளும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து விசாரணைக் கைதிகள் ஆவர். இவர்கள் அசாமில் உள்ள மோரிகான் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மொத்தமாக சேர்ந்து திட்டமிட்டு தப்பிச்செல்ல முடிவு செய்தனர்.
இதன்படி இவர்கள் தங்கள் திட்டத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் செயல்படுத்த முடிவு செய்தனர். எல்லாரும் உறங்கும் அந்த நேரத்தில் சைபுதீன், சைருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய ஐந்து கைதிகளும், சிறையின் இரும்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் போர்வைகள், பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகளைக் கொண்டு சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவற்றில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்
கைதிகள் தப்பிச் சென்றதை கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்த சிறை காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மோரிகான் மாவட்ட சிறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளது. கைதிகள் தப்பிய விவகாரத்தில் பிரசாந்தா சைகியா என்ற ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் குவாஹாத்தியைச் சேர்ந்த இரண்டு உதவி ஜெயிலர்கள் சிறையை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அஸ்ஸாம் சிறைத்துறை ஐஜி,புபாலி கோஹெய்ன் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்.
தப்பியோடிய கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூர் மற்றும் மோரிகான் மாவட்டத்தில் உள்ள லாஹோரிகாட் மற்றும் மொய்ராபரி ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என்று மோரிகான் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications