ஜெ. வழக்கு தீர்ப்பு, சிறுமிகள் பலாத்காரம், மங்கள்யான், தீவிரவாதி கைது: 2014ல் பரபரத்த கர்நாடகா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது, 5 பள்ளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியது என்று இந்த ஆண்டு கர்நாடகா பரபரத்துள்ளது.
2014ம் ஆண்டுக்கு விடை கொடுக்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2014ம் ஆண்டு கர்நாடகத்தில் பல மறக்க முடியாத மற்றும் சில முக்கிய திருப்பங்கள் ஏற்பட காரணமான சம்பவங்கள் நடந்துள்ளது.
அதன் விவரங்களை பார்ப்போம்,

இன்போசிஸ்
பெங்களூரில் உள்ள இன்போசிஸில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி பலரையும் வியக்க வைத்தது அந்நிறுவனம். இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். நிறுவனர் அல்லாத ஒருவர் சிஇஓவாக ஆகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஜெயலலிதா
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இதையடுத்து முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அபராதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் ரூ.100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தோர்தல்
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17ல் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு வெறும் 9 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி கிடைத்தது.

பலாத்காரம்
பெங்களூரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

மங்கள்யான்
மங்கள்யானை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ சாதனை படைத்தது.

நந்தன் நிலகேனி
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இன்போசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலகேனியும், ஆம் ஆத்மி சார்பில் அதே நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ வி. பாலகிருஷ்ணனும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

மெஹ்தி
ட்விட்டர் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக பெங்களூரைச் சேர்ந்த மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரோ தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

பட்கல் சகோதரர்கள்
தீவிரவாதத்துடன் பெங்களூர் பெயர் அடிபடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. பெங்களூரைச் சேர்ந்த காபீல் அகமது என்பவர் லண்டனில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டிச் சென்று ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை தாக்கினார். இந்த தாக்குதலில் அவர் பலியானார். மேலும் கர்நாடகாவில் உள்ள பட்கல் நகரைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல் சகோதர்கள் தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைத் துவங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications