'பெமா' விதி மீறலில் பிளிப்கார்ட் நிறுவனம்- ரூ1,000 கோடி அபராதம் விதிக்கிறது அமலாக்கப் பிரிவு!!
பெங்களூர்: ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதில் விதி மீறல் இருப்பது தெரியவந்துள்ளதால் ரூ1,000 கோடி அபராதம் விதிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பிளிப்கார்ட். இந்த நிறுவனம் 2013ஆம் ஆண்டு வரை முதலீடுகளாக வெளிநாட்டில் இருந்து ஏராளமான நிதியைப் பெற்றிருக்கிறது.
ஆனால் இ காமர்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கிடையாது. இதன் பின்னர் 2013ஆம் ஆண்டு முதல் தமது வர்த்தக நடைமுறைகளை பிளிப்கார்ட் மாற்றி அமைத்தது.
இருப்பினும் விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து 2013ஆம் ஆண்டுவரை நிதி பெற்றது தொடர்பாக அமலாக்கப் பிரிவு கடந்த 2 ஆண்டுகாலம் விசாரணை நடத்தி வந்தது. தற்போது பெங்களூரிலும் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது.
இந்த விசாரணையில் வெளிநாட்டில் பணம் பெறுதல் தொடர்பான 'பெமா' விதிகளை பிளிப்கார்ட் நிறுவனம் மீறி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு முதல் கட்டமாக விளக்க நோட்டீஸை அனுப்ப அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு ரூ1,000 கோடி அபராதம் விதிக்கவும் அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் பற்றி மட்டுமே அல்லாமல் வேறு சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் குறித்தும் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.