மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: முன்னாள் எம்.பி.க்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை
பீகாரில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ரூ.37.7 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 45 பேரை குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது.
இதில் லாலுபிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள், ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் என கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்குள்ள கோடா கருவூலத்தில் இருந்து ரூ.1.16 கோடியை முறைகேடாக பெற்றதாக ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 18 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சீதாராம் பிரசாத், ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.