மும்பையில் பரபரவென விற்பனையாகும் 'மோடி ஆப்பிள்'
மும்பை: இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோடி ஆப்பிள் மும்பையில் அமோகமாக விற்பனையாகிறது.
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் மும்பை வஷியில் இருக்கும் விவசாய தயாரிப்பு சந்தை கமிட்டியின் (ஏபிஎம்சி)மொத்த வியாபார சந்தைக்கு வந்தது. அதில் மோடி என்ற பெயர் கொண்ட ஆப்பிள்களும் அடக்கம். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த மோடி ஆப்பிள்களை வாங்க ஆள் இல்லை. ஆனால் இந்த ஆண்டு சந்தைக்கு வந்த வேகத்தில் மோடி ஆப்பிள்கள் விற்றுத் தீர்ந்துவிட்டது.

அதற்கு காரணம் ஆப்பிள்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் உள்ளது தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏபிஎம்சி இயக்குனர் சஞ்சய் பன்சாரே கூறுகையில்,
மோடி பிராண்ட் ஆப்பிள்கள் இதற்கு முன்பும் இத்தாலியில் இருந்து வந்துள்ளது. அந்த ஆப்பிளின் பெயருக்கும் பிரதமர் மோடியின் பெயருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
18 முதல் 20 கிலோ எடை கொண்ட மோடி ஆப்பிள்கள் அடங்கிய பெட்டி ரூ.2,400 முதல் ரூ.2,600 வரை விற்பனையாகிறது. அதே தரமுள்ள பிற ஆப்பிள்கள் அதிகபட்சமாக ரூ.2,200க்கு விற்பனையாகிறது என்று வியாபாரி ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
மோடி என்பது இத்தாலியைச் சேர்ந்த சர்வதேச பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications