தேர்தல் ஆணையர்கள் காதல் கூட்டணி.. இந்தியா, நேபாளம் இடையே மலர்ந்தது புதிய உறவு
டெல்லி: இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும், நேபாள நாட்டின் தற்போதைய தேர்தல் ஆணையரான இலா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான குரேஷி, டெல்லியில் வசித்து வருகிறார். 69 வயதான குரேஷி, மெக்ஸிகோவில் கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு நேபாள நாட்டின் தற்போதைய தேர்தல் ஆணையராக இருக்கும் இலா.சர்மாவை சந்தித்திருக்கிறார் குரோஷி. அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர், தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
குரேஷிக்கும், அவரது மனைவி ஹம்ராவுக்கும் இடையே ஏற்கனவே மனகசப்பு ஏற்பட்டு, விவாகரத்து செய்து விட்டனர். அதே போல், தற்போது 49 வயதான இலா சர்மாவும் தனியாகவே இருக்கிறார். அவரது கணவர் நவராஜ் பவ்டேல் அந்நாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் தாக்குதலில் நவராஜ் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், குரேஷிக்கும், இலா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து, டெலிகிராப் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. காதல் பற்றி குரேஷியிடம் அந்த நாளிதழ் நிருபர் கேட்டதற்கு, ''எங்கள் இருவருக்கும் இடையே ஒரு உன்னதமான உறவு இருக்கிறது. அதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.