மோடியின் அமெரிக்க பயணம்... விசா மறுப்பு முதல் சிவப்பு கம்பள வரவேற்புவரை ஒரு பார்வை!
டெல்லி: குஜராத் கலவரத்தை தொடர்ந்து அமெரிக்காவால் விசா மறுப்புக்கு உள்ளான நரேந்திரமோடி இன்று சிவப்பு கம்பள வரவேற்புடன் அதே அமெரி்க்காவில் காலடி எடுத்து வைக்க உள்ளதற்கு நடுவே பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த திருப்பங்களில் முக்கியமானவற்றை திரும்பி பார்த்தால் அமெரிக்காவின் கொள்கை மாறுதல் தெரியவரும்.
விசாவுக்கு தடை
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது மாநில முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தார் என்பதால், அவருக்கு அமெரிக்காவில் நுழைய விசா வழங்க முடியாது என்று அமெரிக்கா 2005ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது.
இந்திய எம்.பிக்கள் கடிதம்
2012ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தளர்த்த ஆரம்பித்தபோது, இந்தியாவை சேர்ந்த 65 எம்.பிக்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி, மோடிக்கு விசா அளிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
கையெழுத்து உண்மைதான்
கடிதம் எழுதிய விவகாரம் வெளியே வந்ததும், நாட்டு மானத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டதாக எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அந்த கடிதத்தில் நாங்கள் கையெழுத்திடவில்லை என்று எம்.பிக்கள் கோரசாக தெரிவித்தனர். ஆனால் 2013ம் ஆண்டு ஜூலை மாதம், கலிபோர்னியாவை சேர்ந்த தடயவியல் ஆய்வாளர் இந்த கடிதங்களை ஆய்வு செய்து அது எம்.பிக்களின் கையெழுத்துதான் என்பதை உறுதி செய்தார்.
எம்.பிக்களுக்கு சரத்பவார் ஆதரவு
அதே நேரம் எம்.பிக்களின் செயல்பாட்டை சரத்பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சி வரவேற்றது. மோடிக்கு விசா அளிக்குமாறு ராஜ்நாத்சிங் அமெரிக்காவை கேட்டுக் கொண்டார். எனவே விசா தரக்கூடாது என்ற கோரிக்கையையும் எம்.பிக்கள் பகிரங்கமாக விடுக்கலாம், அதில் தவறில்லை" என்று தேசியவாத காங்கிரஸ் கூறியது.
கருணாநிதி எதிர்ப்பு
அதே நேரம், கடிதத்தில் தனது கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் திமுக தலையிடாது என்றும் கருணாநிதி தெரிவித்தார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியும் கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஐரோப்பிய எம்.பி அதிருப்தி
மோடிக்கு விசா கொடுக்க கூடாது என்று கூறிய பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானுக்கு 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டீஷ் எம்.பி பேர்ரி கார்டினர் கடும் கண்டனம் தெரிவித்தார். மோடிக்கு விசா தரக்கூடாது என்று கூறுவது, இந்திய நீதித்துறையை மதிக்காத செயல் என்று அந்த எம்.பி கண்டித்தார்.
ஜெட்லி ஆவேசம்
அமெரிக்க விசா கேட்டு மோடி விண்ணப்பிக்க கூடாது என்று 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜகவின் அப்போதைய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வாழ்த்தும், வரவேற்பும்
கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்ததுடன், வெள்ளை மாளிகைக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். இம்மாதம் மோடி அமெரிக்காவும் செல்ல உள்ளார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் காத்திருக்கிறது.