டெல்லியில் பயங்கரம்... கோர்ட்டுக்குள் துப்பாக்கிச் சூடு- ஒரு போலீஸ்காரர் பலி- 2 பேர் படுகாயம்!
டெல்லி: டெல்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்த கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கிழக்குப் பகுதியில் கார்கர்டூமா நீதிமன்றத்தின் அறை எண் 73-ல் இர்பான் என்ற கைதியை இன்று முற்பகல் 11.30 மணியளவில் போலீசார் விசாரணைக்காக ஆஜர்படுத்தியிருந்தனர். அப்போது திடீரென நீதிமன்றத்துக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சரமாரியாக கைதி இர்பானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது இர்பானுக்கு அருகே நின்று கொண்டிருந்த ராம்குமார் என்ற போலீஸ்காரர் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. அவர் நீதிமன்ற அறைக்குள்ளேயே உயிரிழந்தார்.
கைதி இர்பான் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லி கிழக்கு இணை ஆணையர் சஞ்சய் பேனிவால் கூறுகையில், நீதிமன்றத்துக்குள் நுழைந்த அந்த கும்பல் இர்பானை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இர்பான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எதிர்பாராதவிதமாக இர்பானுடன் இருந்த போலீஸ்காரர் ராம்குமாரும் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்ற கும்பலில் 3 பேரை போலீசார் நீதிமன்ற வளாகத்திலேயே சுற்றி வளைத்து பிடித்தனர்; மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
முன்விரோதம் காரணமாக இர்பான் மீது அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications