தாவூத்தைத் தேடி வீட்டை விட்டுப் போய் 'தோல்வி'யுடன் திரும்பிய 3 'ஸ்கூல் பாய்ஸ்'!
பாட்னா: பாட்னாவைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள், தாவூத் இப்ராகிமை போலீஸ் அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பணக்காரர்களாக மாறலாம் என்ற ஆசையுடன் தாவூத் வேட்டையில் இறங்கினர். ஆனால் அதில் தோல்வியுற்று தற்போது 3 பேரும் வீடு வந்து சேர்ந்துள்ளனர்.
தாவூத் வேட்டைக்காக, வீட்டிலிருந்து கையோடு எடுத்துக் கொண்டு பணம் காலியானதால்தான் இவர்களது திட்டம் தோல்வியில் முடிந்து வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம்.

இந்த மூன்று மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகிறார்கள். பாட்னாவில் உள்ள செயின்ட் மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். கடந்த வாரம் மூன்று பேரும் காணாமல் போயினர்.
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மூன்று பேரும் திடீரென வீடு திரும்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தாங்கள் தாவூத் இப்ராகிமைத் தேடிப் போனதாகவும், அவரைப் பிடித்து போலீஸாரிடம் கொடுத்து பரிசு பெற்று பெரிய பணக்காரர்களாக ஆகலாம் என்று கருதியதாகவும் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிள்ளைகளை வீட்டில் பொறுப்பாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ள்ளும்படி சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து எச்சரிக்கையும், அறிவுரையும் விடுத்தனர் போலீஸார்.
பல வருடங்களாக ஆளையே பார்க்க முடியாமல் இந்தியாவின் அத்தனை உளவு ஏஜென்சிகளும் திண்டாடி வரும் நிலையில் இந்த மூன்று மாணவர்கள் அவரைப் பிடிக்கக் கிளம்பிப் போனது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் டிவி சீரியல் பார்த்தோ, அல்லது சினிமாப் படம் பார்த்தோ இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஏனென்றால் குறுகிய காலத்தில் பெரிய பணக்காரன் ஆவது போல, பெரிய பெரிய திருடர்களை டக்கென்று கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது போன்ற வேலைகளில் இந்த சினிமா, டிவி சீரியல் நாயகர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதால் இந்தப் பாதிப்பாகத்தான் இருக்கும் என்பது போலீஸாரின் சந்தேகமாகும்.












Click it and Unblock the Notifications