ஜெ.வின் சரியான சொத்து மதிப்பு என்ன? நீதிபதி குமாராசாமி தீர்ப்பில் எது பிழை? சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சரியான சொத்து மதிப்பு என்ன? ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் என்ன கணக்கு பிழை? என்பதை தெளிவாக விளக்குமாறு கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பிவி ஆச்சார்யாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடகா அரசின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜராகி தமது இறுதிவாதத்தை முன்வைத்தார்.
பிவி ஆச்சார்யா தமது வாதத்தின் போது, ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதின்றத்தின் தீர்ப்பில் கணக்குப் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் தமக்கு கூடுதலாக 1 நாள் அவகாசத்தையும் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், உங்கள் இறுதிவாதம் என்பது 2-வது கட்ட விசாரணையைப் போல இருக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் என்ன கணக்குப் பிழை இருக்கிறது என்பதைத் தெளிவாக சரியாக விளக்க வேண்டும்; அதேபோல் ஜெயலலிதாவின் சரியான சொத்து மதிப்பு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்டனர்.
அத்துடன் உங்கள் வாதத்தை நாளை காலையில் 1 மணிநேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமியும் தம்முடைய வாதத்தை நாளை காலை 1 மணிநேரத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.