அசாம் பெண்களிடம் வாலாட்டினால் 'அட்டாக்'தான்.. கராத்தேவில் கலக்குகிறார்கள்!!
ஜார்கட்: அசாம் மாநிலம், ஜார்கட் மாவட்ட பெண்களுக்கு தங்களைக் தாங்களே தற்காத்துக் கொள்ள மார்ஷியல் ஆர்ட் எனப்படும் தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.
இதனால், பெண்கள் தற்போதைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது எல்லா இடங்களிலும் செயல்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய கண்டிப்பாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கராத்தே பயிற்சி:
13 வயதான பிரீதி சர்க்கார் இந்த வருடம் ஜனவரியில் இருந்து கராத்தே கற்று வருகின்றார். இவரது கனவு போலீஸ் அதிகாரி ஆவதுதானாம். அவரது பெற்றோரும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் அவரது பாதுகாப்பிற்கும் இது முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.
ஆபத்தில் உதவும் கலை:
"நான் என்னுடைய சுய பாதுகாப்பிற்காக இந்த கலையைக் கற்றுக் கொள்கின்றேன். இதனால், பாதிப்பில் உள்ள மற்ற பெண்களுக்கும் என்னால் உதவ முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் குற்றங்கள்:
பெண்களைச் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் தற்காப்பு கலையின் பக்கம் தங்களது ஆர்வத்தையும், கவனத்தையும் திருப்பி உள்ளனர்.
அதிகரிக்கும் பெண்கள் எண்ணிக்கை:
அனன்யா நாயக் என்ற பெண்மணி கராத்தேவில் கருப்புப் பட்டை பெற்றவர். இவர் ஜார்கட்டில் பெண்களுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணி புரிகின்றார். இவருடைய முயற்சியால்தான் கராத்தே கற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பும் அதிகம்:
"தற்காப்பு என்பது இக்காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. தங்களுடைய பணி சார்ந்த வேலைகளுக்காக பெண்கள் அதிக நேரத்தை வெளியில் செலவிட வேண்டியுள்ளது. அப்படிபட்ட சூழ்நிலையில் இதுபோன்ற தற்காப்புக்கலைகள்தான் பெண்களுக்கு பாதுகாப்பு. மேலும், கராத்தே கலைக்கு வேலைவாய்ப்பிலும் சிறந்த இடம் உள்ளது" என்று கூறியுள்ளார் அனன்யா.
தற்காப்பு கலையின் அவசியம்:
காவல்துறை அதிகாரிகளும் தற்போதைய சூழ்நிலைகளில் நாடுமுழுவதும் பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.