மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்... 5ம் தேதி அறிமுகம்
டெல்லி: மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் தங்கப்பத்திர திட்டம் வரும் 5-ம் தேதி அறிமுகமாகிறது. இந்த தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
மத்திய அரசு கொண்டு வரும் இப்புதிய திட்டத்தின் கீழ், தங்கத்தின் எடை மதிப்புக்கு ஈடான விலை மதிப்பு கொண்ட பத்திரங்கள் அளிக்கப்படும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்து முதிர்வுப் பணத்தை பெறலாம்.இடைப்பட்ட காலத்தில் இதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் முதல் தொகுதி தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை பெறப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 26-ம் தேதி முதல் தங்கப்பத்திரங்கள் வினியோகிக்கப்படும்.
முதலீட்டு காலம்
வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் இந்தப்பத்திரங்கள் கிடைக்கும். முதல் தொகுதி தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5-வது ஆண்டிலிருந்து முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பும் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரங்களின் விலை
2,5,10,50,100,500 கிராமிலிருந்து 500 கிராம் வரை பல்வேறு எடை மதிப்புகளில் பத்திரங்கள் வெளியிடப்படும். பத்திரங்களின் விலை அவற்றின் வெளியீட்டு நாளுக்கு முந்தைய வாரத்தில் நிலவிய தூய தங்கத்தின் சராசரி விலையை வைத்து கணக்கிடப்படும். தங்கப் பத்திர முதிர்வு பணத்தை திரும்பத் தரும் போதும் இதே நடைமுறையே கணக்கிடப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வட்டி எவ்வளவு?
முதல் தொகுதி பத்திரத்திற்கான வட்டி 2.75 சதவிகிதம் என நிதியமைச்சகம் நிர்ணயித்துள்ளது. முதலீடு செய்துள்ள தொகைக்கான வட்டி ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். இது வருமான வரிக்கு உட்பட்டது. பத்திர விற்பனையின் போது விநியோகக் கட்டணமாக ஒரு சதவிகிதம் வசூலிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நம்பகத்தன்மை
காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் இந்தத் திட்டம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுவதால் இது மிகவும் நம்பகத்தன்மை கொண்டது என கூறப்படுகிறது.
கூடுதலாக வட்டி
பொதுவாக தங்கத்தின் மீதான முதலீட்டு திட்டங்களில் வருவாய் எப்போதும் அதன் விலை ஏற்ற, இறக்கத்தை மட்டுமே சார்ந்து அமையும். ஆனால் தங்கப் பத்திரத் திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கப்படுவது அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப் படுகிறது.
தங்க நகைகளுக்கு ஈடான தங்கப்பத்திரம்
தங்க நகைகளைப் போல தங்கப் பத்திரத்தையும் அடகு வைத்து பணம் பெற அனுமதி அளித்திருப்பது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக இருந்தாலும் 5 ஆண்டுகளில் இருந்தே பத்திரத்தை பணமாக்கும் வசதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தங்க நகைகள் திருட்டுக்கு குட்பை
‘இந்தியா ரேட்டிங்ஸ்' எனும் சந்தை மதிப்பீட்டு நிறுவனத்தின் கூற்றின்படி, தங்க நகைகள் திருட்டு அதிகரித்து விட்ட இக்காலத்தில் அதை பொருள் வடிவில் பாதுகாத்து வைத்திருப்பதை விட காகித வடிவில் முதலீடாக வைத்திருக்கும் வசதி மக்களை கவர்ந்திழுக்கும் என தெரிவித்துள்ளது.
நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு..
தங்கம் விலை நிலவரத்தைப் பொறுத்தே இத்திட்டத்தின் லாப, நஷ்டங்கள் அமையும். தங்கம் விலை எதிர்காலத்தில் குறையும் பட்சத்தில் இத்திட்டம் நஷ்டத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சாத்தியம் குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட்டில் சலுகைகள்
இத்திட்டத்தில் மக்களை கவர்ந்திழுப்பதற்காக மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.