கோபால் சுப்பிரமணியம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வருத்தம்?
டெல்லி: மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு 4 பேரின் பெயர்களை மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்தது.

இது குறித்து அறிந்த கோபால் தான் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிசீலனையில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவர் தனது பெயரை நிராகரித்த மத்திய அரசு மீது குறை கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் டெல்லியில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.எஸ். சவுகானுக்கு நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பரிந்துரை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரை மட்டும் நிராகரிப்பது ஒருதலைப்பட்சமானது.
நீதித்துறையின் சுதந்திரம் சமரசம் செய்யப்பட வேண்டி வந்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால் மத்திய அரசோ கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியது சரியே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கோபால் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications