இடத்தைக் காலி பண்ணுங்க... காங். தலைமையக கட்டடத்தைக் காலி செய்ய மத்திய அரசு உத்தரவு
டெல்லி: டெல்லி அக்பர் சாலையில் காங்கிரஸ் கட்சி தலைமையகம் அமைந்துள்ள பங்களாவைக் காலி செய்யுமாறு மத்திய அரசின் எஸ்டேட்ஸ் துறை கட்சி மேலிடத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2013ம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே நீங்கள் காலி செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை காலி செய்யவில்லை. உடனடியாக காலி செய்யுங்கள். மேலும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இதுவரையிலான உரிமத் தொகை மற்றும் சேதத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து எஸ்டேட்ஸ் துறை இயக்குநர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவின் ஒதுக்கீடானது 2013ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் 3 வருடங்களுக்கு தாங்கள் இக்கட்டடத்தில் செயல்பட அனுமதிக்குமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளதாம். இதுகுறித்து மூத்த தலைவர் மோதிலால் வோரா கூறுகையில், எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதற்கு நாங்கள் பதில் அனுப்பி விட்டோம் என்றார் வோரா.
அக்பர் ரோடு பங்களா தவிர டெல்லியில் மேலும் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் உள்ளன. அனைத்தையும் காலி செய்யுமாறு எஸ்டேட்ஸ் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும் நான்கு கட்டடங்களையும் 3 வருட காலத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்குமாறு காங்கிரஸ் மேலிடம் கோரியுள்ளது.
அக்பர் ரோடு கட்டடத்திலிருந்து கடந்த 1978ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். இதுதான் கட்சியின் தலைமை அலுவலமாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 10 ஜன்பாத் வீட்டுக்கு வலதுபுறமாக இந்த பங்களா உள்ளது.