கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாஜகவுக்கு செக் வைக்க சித்தராமையா 'மூவ்'!
பெங்களூர்: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்க 6 வது ஊதியக்குழு செய்த பரிந்துரையை அமல்படுத்த அம்மாநில காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது எதிர்க்கட்சியான பாஜகவுக்கு செக் வைப்பதை போல அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் சுமார் ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாசமூர்த்தி தலைமையில் ஊதிய குழு அமைக்கப்பட்டது.
ஸ்ரீநிவாச மூர்த்தி தலைமையிலான 6 வது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க, முதல்வர் சித்தராமையாவிடம் பரிந்துரைகளை இன்று வழங்கியது.
30 சதவீதம்
இந்த சிபாரிசில் மாநில அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று செயல்படுத்தும் போது ரூ.10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பல லட்சம் பேருக்கு பலன்
இந்த ஊதிய உயர்வு மூலம், அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உட்பட 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழிர்கள் சுமார் 73,000 பேருக்கும் பலன் கிடைக்கும். 5.73 லட்சம் பென்ஷன்தாரர்கள் குடும்பத்தினருக்கும் இந்த ஊதிய உயர்வு பலன் கொடுக்கும்.
ஊதிய வரம்பு
சீனிவாச மூர்த்தி கமிஷன் தனது அறிக்கையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.17,000 மற்றும் அதிகபட்ச ஊதியமாக ரூ.1,50,600 மற்றும் படிகளை, நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஓய்வூதிய தொகை குறைந்தபட்சம் மாதம், ரூ.8,500மாகவும், அதிகபட்சம் ரூ.75,300மாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேர்தல் ஆதாயம்
கடந்த முறை சதானந்த கவுடா தலைமையிலான பா.ஜ.க. அரசு 22 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கியது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து, தேர்தலில் அவர்கள் ஆதரவை பெற சித்தராமையா தலைமையிலான அரசு தயாராக உள்ளது. மேலும், 2018-19ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் வாக்குகள்
அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வை அரசு அறிவித்தால் அதை வைத்து எளிதாக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாக்குகளை ஈட்டிவிடலாம் என சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.