சிக்கனம்.. மத்திய அரசு இனி காந்தி பிறந்த நாளை மட்டுமே கொண்டாடுமாம்!
டெல்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளைத் தவிர்த்து மற்ற தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களை இனி அரசு சார்பில் நடத்துவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கான செலவையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக விளம்பரக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் குமார் ஷெத் கூறுகையில், ‘விளம்பர கொள்கையை மறுசீராய்வு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அமைச்சரவை செயலகத்தில் இருந்து கடிதம் அனுப்பட்டுள்ளது. அரசு சார்பில் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டிய குறிப்பிட்ட தலைவர்கள் குறித்த பட்டியல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான 15 தலைவர்களின் பெயர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை, இந்திரா, ராஜீவ், அம்பேத்கார், சர்தார் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, நேரு, சவுத்ரி சரண் சிங், சுவாமி விவேகானந்தர், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெக்ஜீவன் ராம், மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாக்களை கொண்டாட பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் தனித்தனியாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், சம்பந்தப்பட்ட தினங்களில் இது போன்ற விளம்பரங்களே செய்திதாள்களில் நிரம்பி வழிவதாகவும், இதனை தவிர்ப்பதற்காகவும், இதற்கான செலவைக் குறைப்பதற்காகவுமே மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகக் கூறப் படுகிறது.
இதன்படி, இனி குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாவிற்காக அரசு சார்பில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் மட்டுமே விளம்பரம் தரப்படும். மேலும் ஒரே விழாவிற்காக பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் பலவிதமான விளம்பரங்கள் கொடுக்கப்படுவதும் நிறுத்தப்படும்.
மத்திய அரசின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து, குறிப்பிட்ட முக்கியமான தலைவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் உள்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை, 15 முன்னாள் தலைவர்களின் பிறந்தநாள் மற்றம் இறந்த நாள் விழாவிற்காக மத்திய அரசு சார்பில் ரூ.142 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்திரா, ராஜீவ் மற்றும் நேருவின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் விழாவிற்காக மட்டும் ரூ.53 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.