வெளிநாட்டில் கருப்புப் பணம்: மொத்தம் வெளியானது 7 இந்தியர்களின் பெயர்கள்!: உதவிய பிரான்ஸ்!!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மொத்தம் 7 பெயர்கள் அடங்கியுள்ளன.
டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், குஜராத்தைச் சேர்ந்த தங்க வியாபாரி சமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த டிம்போலா பிரைவேட் லிமிடெட் சுரங்க நிறுவனத்தின் இயக்குனர் ராதா டிம்போலா ஆகியோரின் பெயர்கள் தவிர டிம்போலா நிறுவனத்தின் மற்ற இயக்குனர்களான சேத்தன் டிம்போலா, ரோகன் டிம்போலா, அன்னா டிம்போலா மற்றும் மல்லிகா டிம்போலா ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் மீது வருமான வரி சட்டம் 276 C (1), 277 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பணத்தை முறைகேடாக பதுக்கி வைத்தது, அரசுக்கு தவறான தகவல் அளித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க முடியும்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தத்து அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.
பர்மனின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் அளித்துள்ளது.
வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டும் என்று தெரிகிறது. ஆனால், இதில் இந்த 5 பேரின் பெயர்களை மட்டும் மத்திய அரசு செலக்டிவாக வெளியிட்டிருப்பது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பர்மனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பர்மன் வெளிநாட்டில் வசித்தபோது அவர் இந்தக் கணக்கைத் துவக்கினார். இந்திய சட்ட திட்டங்களை அவர் மதித்தும், இதற்கு இந்தியாவில் வருமான வரி செலுத்தியும் வந்துள்ளார். ஆனால், எதற்காக அவரது பெயரை தேவையில்லாமல் இழுத்துவிட்டுள்ளனர் என்று தெரியவில்லை என்றார்.
அதே போல சமன்லால் லோதியாவும், எனக்கு வெளிநாட்டிலோ சுவிஸ் வங்கியிலோ எந்தக் கணக்கும் இல்லை. என் பெயரை பட்டியலில் பார்த்து அதிர்ச்சியில் உள்ளேன் என்றார்.
தனது நாட்டில் கருப்புப் பணம் வைத்துள்ளோரின் பட்டியலை சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு தர மறுத்தது. ஆனால், அந் நாட்டின் எச்எஸ்பிசி வங்கியில் பணியாற்றிய ஒருவர் 600 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திருடி அதை பிரான்ஸ் நாட்டிடம் வழங்கினார். இது நடந்தது 2008ம் ஆண்டில். இதையடுத்து அந்தப் பட்டியலை பிரான்சிடம் இந்தியா கேட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இது நடந்தது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்.