பறந்து வந்த தண்ணீர் பாட்டில்! பதறிப்போன அரவிந்த் கெஜ்ரிவால்! குஜராத் தொண்டர்கள் நடுவே கருப்பு ஆடு
காந்தி நகர்: குஜராத்தில் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அங்கு சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.
குஜராத் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது பாஜக 111 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 63 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கோதாவில் குதித்த ஆம்ஆத்மி
பொதுவாக குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே இருமுனை போட்டி நடக்கும். இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி கோதாவில் குதித்துள்ளது. இதனால் மூன்று கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவ உள்ளது. மூன்று கட்சிகளும் தற்போதே தேர்தல் பணியை துவங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சூடுபிடித்த தேர்தல் களம்
ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்து வருகிறது. குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ.3 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்ட பணிகளை துவக்கி வைத்தார். அதோடு தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் செயல்படுத்தி வருகிறார். இதேபோல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. இதனால் குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்
ஆம்ஆத்மியை பொறுத்தமட்டில் அதன் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் 2 நாள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து நேற்று ராஜகோட்டில் உள்ள கோதததனம் கோவிலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார்.

தண்ணீர் பாட்டில் வீச்சு
கோவிலில் அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசியடி நடந்து சென்றார். மேலும் சுற்றி நின்ற தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இந்த வேளையில் திடீரென்று அவரை நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இருப்பினும் அந்த பாட்டில் அவர் மீது படவில்லை. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆம்ஆத்மி கட்சியின் அறிவிப்புகள்
குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குஜராத் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்ட தரமான சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும், அனைத்து கிராமங்களிலும் அரசு பள்ளிகள் கட்டப்படுவதுடன், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications