இது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம்
காந்திநகர்: குஜராத்தில் நேற்று 2வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஓட்டளித்தார். இந்த வேளையில் அவர் பேரணி சென்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை. அவர் பேரணி செல்லவில்லை. மாறாக பிரதமர் மோடி நடந்து சென்றபோது மக்கள் தானாகவே கூடிவிட்டனர் என கூறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2வது கட்டமாக நேற்று 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் ஆட்சியை கைப்பற்ற உள்ளனர் என்பது டிசம்பர் 8 ம் தேதி தெரியவர உள்ளது.
குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்
ஓட்டு போட்ட பிரதமர் மோடி
குஜராத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். தேர்தலில் ஓட்டளிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் குஜராத் வந்தார். இதையடுத்து அவர் காந்தி நகரில் உள்ள தனது தாய் ஹீராபென்னை சந்தித்து ஆசிபெற்றார். அதன்பிறகு நேற்று பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசு பள்ளிக்கு சென்று ஓட்டுப்போட்டார்.
பேரணி என வெடித்த சர்ச்சை
இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்றார். அவரை சுற்றி ஏராளமான பொதுமக்கள் கூடினர். இது பார்க்க பேரணி போல் இருந்தது. மோடி சாலையில் நடந்து செல்ல அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் உற்சாகத்துடன் சென்றனர். தேர்தல் நாளில் பேரணி, பொதுக்கூட்டம் செல்ல அனுமதி கிடையாது. இதை மீறினால் அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இந்நிலையில் தான் பிரதமர் மோடி தேர்தல் நாளில் பேரணி சென்று ஓட்டு சேகரித்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காங்கிரஸ் புகார்
காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில், ‛‛மாநிலத்தில் தேர்தல் ஆணையம் செயலற்று உள்ளது. பிரதமரின் அத்துமீறலை நடவடிக்கையின்றி தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ள ஏதேனும் நிர்பந்தங்கள் உள்ளனவா?. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்'' என்றார். மேலும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அகமதாபாத் தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதுபற்றி தற்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குல்தீப் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தானாகவே கூடினர்
அதன்படி, ‛‛பிரதமர் மோடி ஓட்டுச்சாவடிக்கு நடந்து சென்றது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கையை அகமதாபாத் தேர்தல் அதிகாரி தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி பிரதமர் நரேந்திர மோடி ரோட்ஷோ (பேரணி) செல்லவில்லை. மாறாக பிரதமர் மோடி நடந்து சென்றபோது பொதுமக்கள் தானாகவே கூடி உள்ளனர்'' என தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் ஆணையத்தின் விளக்கத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மம்தா விமர்சனம்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடி அருகே பேரணி சென்றதாக எழுந்த புகாரால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கோபம் அடைந்தார். அவரும் தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, ‛‛ தேர்தல் சமயத்தில் பிரதமரும், அவரது கட்சியும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாக்களிக்கும் நாளில் சாலை பேரணிக்கு அனுமதி கிடையாது. ஆனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியும் விவிஐபிகள். அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்'' என சாடியிருந்தார்.