நெருங்கும் குஜராத் தேர்தல்!பறக்கும் பிரதமர் மோடி- ரூ.3,050 கோடி திட்டங்களுக்கு நாளை மறுநாள் அடிக்கல்
அகமதாபாத்: குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் ரூ3,050 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. குஜராத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்கடசி மோதலில் சிக்கி இருக்கிறது.
இதனால் பஞ்சாப் பாணியில் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது. குஜராத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதில் ஆம் ஆத்மி தீவிரமாக இருக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைவிடாமல் குஜராத்தில் தொடர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் குஜராத்தில் பிரதமர் மோடி நாளை மறுநாள் குஜராத்தில் ரூ3,050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது, நவ்சாரியில், 'குஜராத் பெருமை இயக்கத்தின்' பலவகையான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். 7 திட்டங்களை தொடங்கி வைத்தல், 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
நவ்சாரியில், எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார். அகமதாபாதில் உள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில், விண்வெளித் துறையில் பணியாற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பரிமாற்ற நிகழ்ச்சியும் இதில் இடம் பெறும்.
இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகம் அமைப்பது குறித்த அறிவிப்பு ஜூன் 2020-ல் வெளியிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் துறைகளில், விண்வெளி செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்தலுக்கு விண்வெளித் துறையின் சுயேச்சையான ஒற்றைச் சாளர முகவர் அமைப்பாக இது செயல்படும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் இது வாய்ப்புகளை வழங்கும் என்கின்றனர் மத்திய அரசு அதிகாரிகள்.