மொத்த “பவரை” காட்டிய பாஜக! விரட்டும் காங்கிரஸ், ஆம் ஆத்மி.. குஜராத் தேர்தலில் நெருங்கும் கிளைமாக்ஸ்
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், மூன்ற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் குஜராத்தில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் குஜராத் தேர்தல் நிலவரம் குறித்து சற்று அலசுவோம்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கின்றன. இதில் குறிப்பாக பாஜக முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது.
குஜராத்தின் மைந்தர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அம்மாநிலத்தில் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தேர்தலில் 32 ஆண்டுகளாக கோலோச்சும் 'தலைக்கட்டுகள்'.. இவர்கள் வைப்பதுதான் சட்டமாம்! குஜராத் கள நிலவரம்
மொத்தமாக இறக்கிய பாஜக
இவர்கள் அல்லாமல் மத்திய கேபினட் அமைச்சர்கள், பிற மாநில முதலமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என அனைவரையும் மொத்தமாக குஜராத்தில் இறங்கி பவர் காட்டி வருகிறது பாஜக. இதனால் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
ராகுல் காந்தி
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் பாஜகவுடன் போட்டிப்போடுக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி தற்போதுதான் குஜராத் பிரச்சாரத்துக்கு வந்துள்ளார். 2 நாட்கள் மட்டுமே அவர் குஜராத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் பாஜக அளவுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு என நட்சத்திர முகம் குஜராத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.
மும்முனைப் போட்டி
குஜராத் தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் குஜராத்தில் நடக்கப்போகும் மும்முனைப் போட்டியின் காரணமாக பாஜகவே பலனடையும் என்கின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
நெருங்கும் சாதனை
இந்த வெற்றி அடுத்த 2 தேர்தல்களிலும் தொடரும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது முன்னணியின் சாதனையை பாஜக முறியடிக்கும். பாஜகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது நரேந்திர மோடிதான். தேர்தலில் அவர் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறார்.
பட்டேல் சமுதாயம்
மேலும் குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்த முதலமைச்சர் பூபேந்திர பட்டேலையே இம்முறையும் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்து இருப்பது பாசிட்டிவான ஒன்றாக உள்ளது. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த சமுதாயத்திடம் இருந்து பாஜகவுக்கு எழுந்த எதிர்ப்பு இம்முறை இருக்காது என்று கூறப்படுகிறது.
காங்கிரஸுக்கு நெகட்டிவ்
அதே நேரம் ஒற்றுமை யாத்திரையால் ராகுல் காந்தி பிரச்சாரத்துக்கு அதிகம் வராதது காங்கிரஸுக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தியின் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் அதிக அளவிலான தொகுதிகளில் வென்றது. ஆனால், இம்முறை அது சந்தேகம் என்று பேசப்படுகிறது.
2வது இடம்
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய எழுச்சி என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பாஜகவுக்கு ஏற்பட்ட எழுச்சியைபோல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸின் முழுமையான பங்கெடுப்பு இதில் இல்லாததால் 2 வது இடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மென்மையான இந்துத்துவா
இதனால் காங்கிரஸ் வசம் இருந்த நகர்புற தொகுதிகள் ஆம் ஆத்மி, பாஜக வசம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மென்மையான இந்துத்துவ போக்கை கையில் எடுத்திருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், பாஜகவை காங்கிரஸ் வீழ்த்த முடியாமல் தவிப்பதை சுட்டிக்காட்டியே பாஜக எதிர்ப்பாளர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.
வெற்றி வாய்ப்பு
குறிப்பாக அவர் அறிவித்து வரும் இலவச திட்டங்களால் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவும் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும். இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் கூடுதல் பலம் மற்றும் நம்பிக்கையோடு போட்டிபோடும். ஆனால், இதில் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்க பாஜக அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுத்துவிட்டது எனலாம்.