குஜராத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு! தேர்தல் பணியில் இருந்த 2 வீரர்கள் பலி! சக வீரரே வெறிச்செயல்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குத் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே குஜராத்தில் உள்ள போர்பந்தர் அருகே தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சக வீரர்களை நோக்கிப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரண்டு துணை ராணுவப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
சக வீரரே வெறிச்செயல்
மேலும், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று மாலை நடந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் நடந்த போது, அவர்கள் ஆக்டிவ் டியூட்டியில் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் நேற்று மாலை வழக்கம் போலப் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அது திடீரென மோதலாக மாறவே, பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
வாக்குவாதம்
இவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியனை (IRB) சேர்ந்த வீரர்கள் ஆவர். குஜராத்தில் மத்திய ஆயுதக் காவல் படையினருடன் இணைந்து இவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை போர்பந்தர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா உறுதி செய்துள்ளார். அவர்களுக்குள் என்ன வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் இந்த மோதலுக்குக் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
என்ன காரணம்
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு வீரர்கள் மேல் சிகிச்சைக்காக 150 கிமீ தொலைவில் உள்ள ஜாம்நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "சனிக்கிழமை மாலை ஏதோ விவகாரத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் வீரர் ஒருவர் தனது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
அவர்களில் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் தோட்டா பாய்ந்துள்ளது. மற்றொருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. போர்பந்தரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள துக்டா கோசா கிராமத்தில் இந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்" என்று அவர் தெரிவித்தார்.. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.