பசுவதை செய்தால் ரூ.5 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும்... சட்டம் போட்ட குஜராத் அரசு
குஜராத் மாநிலத்தில் பசு வதை செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் வழங்க ஏதுவாக சட்டம் இயற்றியுள்ளது அம்மாநில அரசு. இது பெரிய அளவுக்கு குஜராத் மாநிலத்தில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது
காந்திநகர்: பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய விதிகளை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தால் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.
குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, புதிய விதிகள் வெளியிடப்பட்டது. அதன்படி சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கும், உரிய அனுமதி பெறாமல் மாடுகளை வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட சட்டத்தின் புதிய விதிகளை குஜராத் மாநில அரசு நேற்று வெளியிட்டது.
இதனிடையே மாடு விற்பனையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் கோவில்பட்டியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான கட்டுப்பாட்டுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.