33 பேர் பலியான தீ விபத்து: ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை இன்றும் சாடிய குஜராத் உயர்நீதிமன்றம்!
அகமதாபாத்: 33 பேரை பலி கொண்ட குஜராத் ராஜ்கோட் பொழுது போக்கு விளையாட்டு மைய தீ விபத்து வழக்கில் ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருக்கிறது. குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை; அதிகாரிகளுக்கு கண்பார்வை இல்லையா? தூங்கிக் கொண்டிருந்தனரா? என சரமாரியாக அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ராஜ்கோட்டில் டிஆர்பி கேம் என்ற சிறுவர்களுக்கான தனியார் விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர், சிறுமியர் இம்மையத்துக்கு வருகை தந்தனர். அப்போது விளையாட்டு மையத்தின் தரைத் தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலே 4-வது மாடி வரை பரவியது. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உட்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பைரேன் வைஷ்ணவ், தேவன் எம். தேசாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை நீதிபதிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் உரிய அனுமதி பெறாமல் இயங்கி இருக்கின்றன. இதை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு கண்கள் இல்லையா? அல்லது மாநில அரசு உறங்கிவிட்டதா? மாநில அரசு மீது நம்பிக்கை வரவில்லை. 24 மாதங்களாக அனுமதியே பெறாமல் ஒரு பொழுது போக்கு விளையாட்டு மையம் செயல்பட்டிருக்கிறது.. இந்த மையத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றதாக போட்டோக்களை காட்டுகிறீர்களே.. இந்த படத்தில் இருக்கும் அதிகாரிகள் அந்த மையத்துக்கு விளயாடவா போனார்கள்? எதற்காக அங்கே போனார்கள்? ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகள் கண்களை மூடிக் கொண்டா இருந்தனர்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின் போதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என காட்டமாக நீதிபதிகள் விமர்சித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications