வதேராவுக்கு கடும் நெருக்கடி:- இழுத்து மூடிய நிறுவனங்கள், சொத்து விவரத்தை தோண்டுகிறது ஹரியானா அரசு!!
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் விவரங்களை ஹரியானா அரசு திரட்டி வருகிறது. இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் என்று கூறப்படுகிறது.
சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பல மாநிலங்களில் ஏழைகள் மற்றும் அரசு நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கிக் குவித்து 'நிலக் கொள்ளை'யில் ஈடுபட்டார். பின்னர் இந்த நிலங்களை தனியார் நிறுவனமான டி.எல்.எப்.க்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தார் என்பது குற்றச்சாட்டு.

இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்காவை முன்பு அம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு பந்தாடியது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே தமது பல நிறுவனங்களை வதேரா மூடினார்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் வேலையான வதேராவின் நிலக்கொள்ளை விவகாரம் கையிலெடுப்போம் என்று அந்த அரசு அறிவிக்க.. எஞ்சிய நிறுவனங்களையும் இழுத்து மூடினார் வதேரா.
ஆனாலும் ஹரியானா அரசு விடுவதாக இல்லை. குர்காம் மாவட்ட மாஜிஸ்திரேட் சேகர் வித்யார்திக்கு அம்மாநில அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், வதேரா வாங்கிக் குவித்த சொத்துகள், இழுத்து மூடிய நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் வதேரா மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக் கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications