ஹரியான பாஜகவில் பூகம்பம்.. அடுத்தடுத்து விலகிய அமைச்சர், எம்எல்ஏ! சீட் கிடைக்காததால் அதிருப்தி
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பாஜக எம்எல்ஏ, அமைச்சர் என முக்கிய நபர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் 67 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன. இதில் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் சிலருக்கு அதிருப்தி இருந்திருக்கிறது. இந்த அதிருப்தி காரணமாக, ஹரியானா பாஜக மூத்த தலைவரான ஷம்ஷேர் கில், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். அதாவது உக்லானா சட்டமன்றத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்று பஞ்சாயத்து வெடித்தது. ஷம்ஷேர் கில் ஒருவரின் பெயரை குறிப்பிட.. கட்சி தலைமை அதனை ஏற்க மறுத்து வேறு ஒருவருக்கு சீட்டை ஒதுக்கியது. இதற்கு ஷம்ஷேர் கில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
"உக்லானா தொகுதியை தவறாக ஒதுக்கப்பட்ட இருப்பதன் மூலம் கட்சிக்கு மட்டுமின்றி.. ஒட்டுமொத்த ஹரியானாவுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். பாரதிய ஜனதா கட்சி இனி அடல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக இருக்கப்போவதில்லை" என்று கூறிவிட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.
இதனை தொடர்ந்து ரத்தியா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான லட்சுமண நாபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு.. சிர்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி, சுனிதா துக்கலை வேட்பாளராக கட்சி அறிவித்தது. எனவேதான் நாபா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அதேபோல ராணியா சட்மன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி, ஹரியானா கேபினட் அமைச்சர் சவுத்ரி ரஞ்சித் சிங் சவுதாலா தனது கேபினட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"நான் நிச்சயம் ராணியா தொகுதியில் போட்டியிடுவேன். தப்வாலியில் போட்டியிட பாஜக எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் நான் இதனை ஏற்கவில்லை. ராணியா தொகுதியில் ரோட் ஷோ நடத்தி எனது பலத்தை காட்டுவேன். வேறு கட்சியிலிருந்தோ, சுயேட்சையாவோ நான் போட்டியிடுவேன்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஹரியானா பாஜக மீது வாரிசு அரசியல் புகார் இருக்கிறது. அதாவது அடம்பூர், சமல்கா, அட்டேலி, தோஷம், சார்க்கி தாத்ரி ஆகிய தொகுதிகளில், முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் மகன்/மகள்களுக்கு கட்சி சீட் ஒதுக்கியுள்ளது. தேசிய அளவில் வாரிசு அரசியலை விமர்சித்து வந்த பாஜக, ஹரியானாவில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications