பான் மசாலா கடையின் ஒருமாத கரண்ட் பில் “ரூபாய் 132 கோடி”- அதிர்ச்சியில் கடைக்காரர்!
சண்டிகர்: ஹரியானாவில் சாதாரண கடைக்காரருக்கு ரூபாய் 132 கோடிக்கு மின்கட்டண பில் வந்ததால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோனிபட் மாவட்டம், கோஹானா சந்தை பகுதியில் பான் மசாலா கடை நடத்துபவர் ராஜேஷ். இவருக்கு இந்த அக்டோபர் மாதத்திற்கான மின் கட்டண பில் வந்தது. அதில் ரூபாய் 132.29 கோடி அவர் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தகட்டண தொகை எண்களோடு, எழுத்தாலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததால் அதை கண்டு ராஜேஷ் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது நான் ஒரு சாதாரண கடை நடத்தி வருகிறேன். எனது கடையில் ஒரு பல்ப் மற்றும் மின்விசிறி மட்டுமே உள்ளது. எனக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 1000க்குள் மட்டுமே மின்கட்டணம் வரும். இந்த மாதம் எனக்கு வந்த பில்லை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறுகையில், இது கம்யூட்டரில் ஏற்பட்ட பிழைதான் காரணம். இது சரி செய்ய உரியகட்டணம் மட்டும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.