'நீங்க யார்கிட்ட என்ன பேசுனீங்கனு.. எல்லா ரெக்கார்டிங்கும் இருக்கு..' பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: பெகாசஸ் விகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொலைப்பேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட உலகெங்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான பெகாசஸ் விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மேற்கு வங்க காவல் கண்காணிப்பாளரின் தொலைப்பேசி உரையாடல்களின் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் எனக்கு தெரியும்
கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது அப்போது பேசிய சுவேந்து அதிகாரி, "அமர்நாத் என்ற சிறுவன் இங்கு எஸ்.பி ஆக வந்துள்ளார். அவர் எதற்கு இங்கு வந்துள்ளார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என எல்லாம் எனக்குத் தெரியும். நான் பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கும் மூத்த அரசியல்வாதி என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆடியோ பதிவுகள்
மத்திய அரசின் அதிகாரியான நீங்கள் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதிக்கோ அல்லது பாரமுல்லாவில் பகுதிக்கோ டிரான்ஸவர் செய்யப்படும் அளவிலான செயல்களில் ஈடுபடாதீர்கள். மம்தாவின் மருமகன் (அபிஷேக் பானர்ஜி) தொடங்கி அவரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் உங்களை அழைத்தார்கள் என்ற தகவலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற பதிவுகளும் என்னிடம் உள்ளது. உங்களிடம் மாநில அரசு இருக்கிறது என்றால், எங்களிடம் மத்திய அரசு உள்ளது.

நிறுத்த முடியாது
பொய்யான வழக்குகள் மூலம் தேசியவாத சக்திகளை ஒருபோதும் நிறுத்த முடியாது" என்று அவர் கூறினார். சுவேந்து அதிகாரி மீது கொல்கத்தா காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்படியொரு பரபரப்பு கருத்தை அவர் முன் வைத்துள்ளார், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் ஒன்றில் சுவேந்து அதிகாரிக்கு உள்ள தொடர்பு குறித்துக் காவல் துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்,

திரிணாமுல் காங்கிரஸ்
இந்தியாவில் பெகாசஸ் விகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், சுவேந்து அதிகாரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் தனது ட்விட்டரில், "திரிணாமுல் தலைவரின் அலுவலகத்தின் தொலைப்பேசி பட்டியல், உரையாடல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாக வெளிப்படையாக இவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான சான்று. அவரது காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் முழு சதி வெளிச்சத்திற்கு வெளிச்சத்திற்கு வரும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பெகாசஸ் விவகாரம்
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும். அவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்குச் செல்கிறார் என அனைத்தையும் கண்காணிக்க முடியும். பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், ஒரு நீதிபதி, 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் மொபைல் எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியலில் மம்தாவின் மருகன் அபிஷேக் பானர்ஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications